குடும்பத்தகராறில் கத்திக்குத்து.. பெண்ணின் உடலில் 30 மணி நேரமாக 6 அங்குல அளவில் சிக்கி இருந்த கத்தி அகற்றம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரில் வசித்து வரும் தம்பதி பால்ராஜ்- மல்லிகா(40). கடந்த ,மாதம் 25 ஆம் தேதி இவர்களது வீட்டில் நடந்த குடும்ப சண்டையில் மல்லிகாவை ஒருவர் கூர்மையான கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மல்லிகாவை அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நுரையீரல் பகுதியில் 7 அங்குலம் அளவிற்கு அந்த கத்தி உள்ளே இறங்கியிருந்தது தெரிய வந்ததால், அவர் கடந்த 26 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் மல்லிகாவை பரிசோதித்ததில் அவரது நெஞ்சு பகுதியில் இருந்த கத்தி நுரையீரல் தவிர வேறு எந்த பகுதியிலும் இறங்கவில்லை என்பதையும் 6 அங்குலம் உள்ளேயும் 1 அங்குலம் வெளியேயும் கத்தி இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து மல்லிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மருத்துவமனை டீன் காளிதாஸ் தலைமையில் மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை செய்து சுமார் 30 மணி நேரம் பெண்ணின் உடலில் இருந்த கத்தியை அகற்றியுள்ளனர். மேலும், கத்திக் குத்தியதால் பாதிக்கப்பட்டிருந்த நுரையீரலும் சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.