தன்னை அவதூறாக பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்குக்கோரி சித்த மருத்துவர் வீரபாபு புகார்!
சமூகவலைதளத்தில் தன்னை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் சித்த மருத்துவர் வீரபாபு புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்தவர் வீரபாபு (45). சித்த மருத்துவரான இவர் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “சமூகவலைதளத்தில் தன்னைப் பற்றியும் தன் மருத்துவம் பற்றியும் வெளியாகும் வீடியோக்களில் கமெண்ட் பாக்ஸில் லியோ ஆன்டனி என்பவர் தன்னை பற்றி தவறான செய்திகள் மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். தனக்கும் தான் மக்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.