பித்ரு வழிபாடு ஏன் மிக முக்கியம் தெரியுமா?

 

பித்ரு வழிபாடு ஏன் மிக முக்கியம் தெரியுமா?

ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவருக்கு இறுதிச் சடங்கு செய்வது முதல் காரியம், திதி கொடுப்பது, ஆண்டின் மூன்று முக்கிய அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுப்பது எல்லாம் மிகவும் முக்கியம். இறந்தவர் மறுபிறவிகள் எடுத்தாலும், முக்தி அடைந்திருந்தாலும் அல்லது பித்ரு உலகில் இருக்கும் காலத்திலும் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் அவர்களைச் சென்றடைகின்றன.

பித்ரு வழிபாடு ஏன் மிக முக்கியம் தெரியுமா?

உடலை விட்டுவிட்ட ஆன்மா மரணமடைந்த தினத்திலிருந்து 9 நாட்கள் உடலின்றி இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த 9 நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகத்தான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். 10வது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பிறகு பல கிரகங்களையும் கடந்து, ஆறு மாதங்கள் பயணம் செய்து அந்த ஜீவன் அழகான நீரூற்றுகளும், சோலைகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. பூமியில் தனது பிள்ளைகள் திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை உண்டு ஆறு மாத களைப்பு நீங்கி, மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு உணவளித்த பிள்ளைகளுக்கு ஆசிர் வழங்குகின்றது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன. அங்குதான் அந்த ஜீவனின் அடுத்த நிலை, அடுத்த பிறவி எடுப்பதா, முக்தி அடைவதா என்பது எல்லாம்  அவரவர் செய்த பாவ, புண்ணியம் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.

பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய சந்ததியினர் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜை பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்பத் தந்துவிடுகிறார்.

நம் முன்னோர் நல்ல காரியங்கள் செய்து மரணம் அடைந்திருந்தால், அத்தகையவர்களுக்கு நாம் செய்யும் பூஜை பலன்கள் இறைவனைச் சென்றடைகிறது. ஆனால் நம் முன்னோர், முன்னோருக்கு முன்னோர் யார் என்று நமக்குத் தெரியாது. அவர்கள் பாவங்கள் செய்தார்களா, புண்ணியங்கள் செய்தார்களா என்பதும் நமக்குத் தெரியாது. எனவே, தொடர்ந்து நம் முன்னோருக்காக பித்ரு பூஜைகளை செய்ய வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. இப்படித் தொடர்ந்து செய்யும் போது முன்னோரின் ஆசி நமக்குக் கிடைக்கும். அது துன்பங்களிலிருந்து நம்மையும் நம் சந்ததியையும் காக்கும்!