நிவாரணப் பொருட்களை அலட்சியமாக வீசி எறிந்த தி.மு.க எம்.எல்.ஏ! – பொது மக்கள் அதிருப்தி
மதுரை கிழக்கு தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தி நிவாரணப் பொருட்களை மக்களிடம் வழங்குவதற்கு பதில் தூக்கி எறிந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உங்களிடம் நிவாரணப் பொருட்களை யார் கேட்டு அழுதா என்று நெட்டிசன்கள் கொந்தளிப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். அரசு உதவி செய்யும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பெரிய அளவில் உதவி கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி மக்களிடம் பெயரை வாங்க உதவிகள் வழங்கி வருவதாக கூறுகிறது. லட்சக் கணக்கான மக்களுக்கு உதவி செய்ததாக ஸ்டாலின் பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால், அதற்கு ஆப்பு வைப்பது போல பல தி.மு.க நிர்வாகிகள் நடந்து வருகின்றனர்.
மதுரை கிழக்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மூர்த்தி. எதிர்க்கட்சியாக இருக்கும் போதே ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர். பல்வேறு புகார்கள் இவர் மீது உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக இவர் சென்றார். மக்களின் கைகளில் உதவிப் பொருட்களை வழங்குவதற்கு பதில், நாய், குரங்குகளுக்கு உணவு வீசுவது போல உதவிப் பொருட்களை தூக்கி எறிந்துள்ளார். எம்.எல்.ஏ-வின் இந்த செயலால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் உதவிப் பொருட்களை வாங்காமலும் சென்றனர்.
செருப்பால் அடிக்க பாயும் மதுரை திமுக எம்.எல்.ஏ மூர்த்தி. pic.twitter.com/h7bWVt80NF
— balamurugan (@bala552008) June 23, 2020
உதவி செய்வதில் தவறு இல்லை, ஆனால் அதை முழு மனதோடு செய்ய வேண்டும். இப்படி தூக்கி எறிந்துதான் உதவி செய்ய வேண்டும் என்றால் அப்படி ஒரு உதவி தேவையே இல்லை. சுய மரியாதை என்பது எல்லோருக்குமானதுதான். உங்களிடம் உதவி செய்யுங்கள் என்று யார் அழுதா என்று நெட்டிசன்கள் கொந்தளிப்புடன் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். பொருட்களைத் தூக்கி வீசிய எம்.எல்.ஏ மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இப்போது பொருட்களை தூக்கி எறிந்த இதே மூர்த்தி எம்.எல்.ஏ வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படி குனிந்து வாக்குகளைக் கேட்கப் போகிறார் என்று பார்ப்போம் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.