திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி!
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எம்.எல்.ஏ அன்பழகனை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், ஜெ.அன்பழகனின் மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.