“இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு சமம்” – மு.க. ஸ்டாலின்
இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு சமம் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய கல்விக் கொள்கையில், நீட், வங்கி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, அஞ்சல் துறைத் தேர்வுகளில், சமூகநீதிக்குச் சாவுமணி அடித்த பா.ஜ.க. அரசு, தற்போது மத்திய அரசின் முக்கியத் துறைகளுக்கான இணைச் செயலாளர்கள் பதவிகளில் தமக்கு வேண்டிய ஆட்களை நேரடியாக நியமிக்க இருக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடி வகுப்பினரைப் பாதிக்கும் சமூக அநீதியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானது; எச்சரிக்கை ” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவரது அறிக்கையில், “தனியார் துறையில் இருந்து நியமனம் செய்யப்படும் போது இட ஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். பாஜக , ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் உள்ளவர்களை அரசுத் துறைகளில் சேர்த்து விடுவார்கள்.பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அலுவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உயர்பதவிகளை எட்டாக்கனியாகி அனைத்து முன்னேறிய வகுப்பினர் மற்றும் வேண்டியவர்களும் ஆக்கிரமித்து கொள்வதற்கு வழிவகுக்கும்.இம்முடிவை உடனடியாக மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். அனைத்து துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு. கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். செய்யத் தவறினால் வரலாறு நிச்சயம் மன்னிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.