“அமைச்சர் வீட்டுக்கே செல்லும் அறிவிப்புகள்… தேர்தல் அலுவலர் ரகசிய பேச்சு” – திருச்சியில் பரபரப்பு!
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பிறகு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது; திட்டமிட்டபடி நடந்தே தீரும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.
இச்சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அவரது அலுவலகத்தில் ரகசியமாகச் சந்தித்து பேசினார் என்று கூறி, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இன்று புகார் அளித்தார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய இருதயராஜ், “அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏப். 26ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரை அவரது அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியுள்ளார்.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அலுவலக ஊழியர்கள் யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்காமல், அரை மணி ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.
தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பாக இருந்தாலும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று கையெழுத்திட்டு வருவதுதான் வழக்கம். ஆனால், அமைச்சர் வீட்டுக்கே சென்று அறிவிப்புகள் தரப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை, அமைச்சர் எதற்காக தனியாகச் சந்தித்து அரை மணி நேரம் பேசினார் என்று தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.