‘பதவிக்காகக் கட்சிக்கு வந்தவன் அல்ல’ : பிரபல செய்தி நிறுவனத்தின் மீது துரைமுருகன் பாய்ச்சல்!
பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தி என்றும் அதனால் திமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏதோ எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்திற்குள் கழகத்தை உருவாக்க நான் முயல்வது போல் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
இது என் மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் செய்து வந்திருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவனல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கை பார்த்து ஒரு போராளியாக 1953 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இரு வண்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்” என்று விளக்கமளித்துள்ளார்.