வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா… விசிக, திமுக பிரமுகர்கள் கைது!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதே வேளையில், அரசியல் கட்சிகள் சைலண்ட்டாக பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆங்காங்கே லட்சக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கையும் களவுமாக சிக்கும் பிரமுகர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் 412 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுள் தமிழகத்தில் தான் அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டிடுப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே சீர்காழி பகுதியில் பணப்பட்டுவாடா செய்த திமுக, விசிக பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுகவின் ராஜகௌதமனும் விசிகவின் மணிமாறனும் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்த போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர். அதே போல, அருப்புக்கோட்டை பகுதியில் பணப்பட்டுவாடா செய்த புகாரில் 8ஆவது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் சொக்கலிங்கம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.