மரண தண்டனை தான் இதற்கு ஒரே தீர்வு – விஜயகாந்த்
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க மரண தண்டனை தான் ஒரே தீர்வு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் , தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். குறிப்பாக உ.பியில் பட்டியலின பெண்களுக்கு எதிரான தாக்குதல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க அதிகபட்ச தண்டனையான, மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை தான் ஒரே தீர்வு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் அதிகளவில் பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும் தமிழகத்தில் அயனாவரம் சிறுமி, திண்டுக்கல் சிறுமி, சாலியமங்கலம் சிறுமி என பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் இது தான் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் ஒரே வழி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை நீதியரசர்கள் நிறைவேற்றி பாலியல் சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.