சுகாதார நெருக்கடியை கொள்ளை அடிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தும் கர்நாடக அரசு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..
கோவிட்-19 அல்லது கொரோனா வைரசுக்காக வாங்கிய மருத்துவ கருவிகளில் கர்நாடக அரசு ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் புள்ளிவிவரத்துடன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக அரசு, ஒரு வெண்டிலேட்டர் ரூ.4.78 லட்சம் என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு ரூ.18.20 லட்சம் விலையில் வெண்டிலேட்டரை வாங்கியுள்ளது.
முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, உங்களது அரசு செய்துள்ள ஊழலுக்கு எங்களுக்கு பதில் சொல்லுங்கள். வெண்டிலேட்டர் கிடைக்காததால் மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் பா.ஜ.க. அமைச்சர்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகள் முதல் பரிசோதனை கருவிகள் மற்றும் படுக்கைகள் உள்பட அனைத்து மருத்துவ கருவிகள் கொள்முதலில் ஊழல் செய்வதில் பிசியாக உள்ளனர்.
பா.ஜ.க. அரசு சுகாதார நெருக்கடியை கொள்ளை அடிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கர்நாடகாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,422ஆக உயர்ந்துள்ளது.