நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை... பவானிசாகர் அணைக்கு 6,807 கனஅடி நீர்வரத்து!

 
bhavani sagar dam

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 807 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அந்த முழுவதும் பவானி ஆறு மற்றும் கீழ் பவானி காவல்வாயில் திறக்கப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் மூலம் பல்வேறு நீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. 

bhavanisagar dam

கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 2 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு 104 அடியை எட்டியது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியிலேயே இருந்து வருகிறது.
 

நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 807 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2000 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 4,800 கனஅடி என மொத்தம் 6,800 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.