பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்!

 
trichy

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருபவர்களையும் இணைக்கும் விதமாக செயல்பட்டு வந்தது. இதன் அருகிலேயே ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சத்திரம் பேருந்து நிலையம் ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கடந்த 30ஆம் தேதி திருச்சிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

trichy

இந்த நிலையில், இன்று நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து வைத்து அவர்கள் பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர். முன்னதாக, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்து, புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்திறங்கினர்.

மொத்தம் 11,852 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தில் 7 ஆயிரம் சதுர மீட்டரில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. ஒரே சமயத்தில் 15 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தரைத்தளத்தில் 54 கடைகளும், பயணிகள் காத்திருப்போர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகியன இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் உணவகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு  முன்பதிவு அறை உணவகம் ஆகியவையும், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

chatram busstand

இங்கு 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.