கடன் தவணை கேட்டு நெருக்கடி… கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை!

 

கடன் தவணை கேட்டு நெருக்கடி… கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே கந்து வட்டி தொல்லை காரணமாக கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(41). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசன் குடும்ப செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் உள்ளிட்ட சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இதற்காக முறையாக தவணையும் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், பொதுமுடக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களாக தவணை செலுத்த வில்லை என கூறப்படுகிறது.

கடன் தவணை கேட்டு நெருக்கடி… கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை!

இதனால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று, கனகராஜ் என்பவர் கணேசனின் வீட்டிற்கு சென்று ரூ.2 லட்சம் பணத்தை கொடுக்கும் படி கேட்டுள்ளார். மேலும், அவர் கணேசனை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேசன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணேசனின் உறவினர்கள், அவரது தற்கொலைக்கு காரணமான கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மருத்துவமனை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துமலை போலீசார், கனகராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.