"கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை"... கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவு!

 
cbe commissioner

கோவை மாநகரில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள், கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று அனைத்து துணை ஆணையர்கள், காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் சிறப்பு பிரிவு உதவி ஆணையர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாநகரில் சட்டம் - ஒழுங்கை பேணி காப்பதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள், கந்துவட்டி வசூலிப்பவர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள், ரவுடியிசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

cbe commissioner

அத்துடன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  புகையிலை, பான் மசாலா பொருட்கள் விற்பவர்கள் மீதும், கஞ்சா, போதை பொருட்கள், போதை ஊசி விற்பனை செய்பவர்கள் மீதும், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீதும், ஒருங்கிணைந்து சூதாட்டம் நடத்துபவர்கள் மீதும், ஒருங்கிணைந்து விபச்சாரம்  செய்யும் நபர்கள் மீதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து காவல்துறையினரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள், போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், காவல் நிலையங்களுக்கு  புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும், உடனுக்குடன் தக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ரோந்து செல்லும்போது காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளவும் உத்தரவிட்டார்.