ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 472 வாகனங்கள் பறிமுதல்... உரிய ஆவணங்களை காணபித்து பெற்றுக்கொள்ள அழைப்பு!

 
erode 2

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசாரால் 472  மோட்டார் சைக்கிள்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களை காண்பித்து வாகனங்களை பெற்றுக்கொள்ள மாவட்ட காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது.  பெரும்பாலும் சாலை போக்குவரத்து விதிகளை வாகனஓட்டிகள் மீறுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து, மாவட்டம் முழுவதும் குற்றப்பிரிவு போலீசார், போக்குவரத்தை போலீசார்  ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது,  முறையான  ஆவணங்கள் இல்லாமல் வண்டி ஓட்டுவது, செல்போன் பேசியபடி வண்டிகளை இயக்குவது, சாலை விதிமுறைகளை மீறுவது  போன்ற காரணங்களால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றன.  

erode 1

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு நகர குற்றப்பிரிவு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கருங்கல் பாளையம், ஈரோடு தாலுகா, மொடக்குறிச்சி, பவானி, சித்தோடு, சத்தியமங்கலம், பங்களாபுதூர், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர், கொடுமுடி, சிவகிரி, மற்றும் மலையம்பாளையம் காவல் நிலையங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக இதுவரை 472 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

நீண்ட நாட்களாக இந்த வாகனங்களுக்கு உரிமையாளர்கள் உரிமை கோராமல் கேட்பாரற்று உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன்  உத்தரவின் பேரில், மாவட்ட காவல்துறை சார்பில் இந்த வாகனங்களில் உரிமையாளர்கள் வரும் 27 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 472 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும். அவற்றின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து தங்களுடைய வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.