நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தகோரி ஈரோடு ஆட்சியரிடம், விசைத்தறி சங்கங்கள் மனு!

 
textile

நூல் விலை உயர்வை நிர்ணய குழு அமைத்து, கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்


தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின்  கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது, இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்த மிகப்பெரிய துறையான ஜவுளித்துறையில்  2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.3000 கோடிக்கு, வருடம் ரூ.44 ஆயிரம் கோடிக்கும் உற்பத்தியாகிறது. இதன் மூலம், ரூ.2,200 கோடி ஜிஎஸ்டி கிடைக்கப் பெறுகிறது. நாட்டின் துணி தேவையை 60% சாதாரண விசைத்தறிகள் பூர்த்தி செய்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை ஜவுளி உற்பத்திக்கு, தேவையான நூல்களை முன்பிருந்த விலையை விட 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

erode

பஞ்சின் விலை குறைவாக இருந்தபோதிலும், பஞ்சு நூல் ஆகிவற்றை ஏற்றுமதி செய்து, செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கி அவ்வப்போது நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே நூல் விலையை நிர்ணயக் குழு அமைத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். சிமெண்ட் விலை உயரும்பொழுது அரசு தலையிட்டு, அதனை குறைக்க செய்கிறது. அதேபோன்று, அன்றாட தேவைகளான வெங்காயம் உருளைக்கிழங்கு குறைக்கச் செய்கிறது. 

இந்த நிலையில், தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ள நூல் விலை உயர்வினால் ஜவுளித்துறை முடங்கிப் போகும் நிலையில் உள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு நூல் உற்பத்தியாளர்கள், நூல் உபயோகிப்பர் சங்கங்கள், அரசு தரப்பு அதிகாரிகளை முத்தரப்பு குழு அமைத்து, அதன் மூலம் நூல் விலையை நிர்ணயம் செய்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டணி சார்பில் மனு அளித்தனர்.