அருப்புக்கோட்டை தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (58). இவருக்கு அனுசியா என்ற மனைவியும், 2 மகன்களும் உ ள்ளனர். இவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ராமகிருஷ்ணன் மதியம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

suicide

அவரது அறைக்கதவு நீண்டநேரமாக பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த சக ஆசிரியர்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, ராமகிருஷ்ணன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ராமகிருஷ்ணனின் மனைவி அனுசிய அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராமகிருஷ்ணன் உடல்நல குறைவு மற்றும் கடன் தொல்லை தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.