திண்டுக்கல் அருகே கார் மோதி இளைஞர் பலி... காரில் சிக்கிய சடலத்தை சாலையில் இழுத்துச்சென்ற அவலம்!

 
dead

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கார் மோதிய விபத்தில் இளைஞர் பலியான நிலையில், காரில் சிக்கிய அவரது உடலை சாலையில் இழுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1ஆம் தேதி இரவு டீசல் நிரப்ப வந்த காரில் இளைஞரின் சடலம் இழுத்துவரப்பட்டு பங்கில் போடப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

dindigul

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் உடலில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் பொங்கம்பட்டை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பது தெரிய வந்தது. பழனிக்கு சுவாமிக்கு தரிசனம் செய்ய சென்ற ஓம்பிரகாஷ், பின்னர் விழுப்புரத்துக்கு பேருந்தில் திரும்பியுள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததால் பேருந்து நடத்துடனர், வடமதுரை பெட்ரோல் பங்க் அருகே இறக்கிவிட்டுள்ளனர். 

 இந்த நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக கார் மோதி ஓம்பிரகாஷ் உயிரிழந்ததும், அவரது உடல் வெள்ளபொம்மன்பட்டி பிரிவு வரை இழுத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, காரை ஓட்டிவந்த புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.