ஈரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

 
encroachments

ஈரோடு பழைய பூந்துறை சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்

ஈரோடு காந்திசாலை அருகே உள்ள பழைய பூந்துறை ரோட்டில்  200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு ஜவுளி வாரச்சந்தை கடைகளும் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனுக்கு புகார் வந்தது.

encroachments

இதை தொடர்ந்து, பழைய பூந்துறை சாலையில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி சார்பில், கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில், சில கடைகளின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். எனினும் ஒரு சிலர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்தனர். இதையடுத்து, நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி அனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடைகளில் முன்பிருந்த விளம்பரப் பலகைகள், பந்தல்கள், கடைக்கு முன் பகுதியில் போடப்பட்டிருந்த மேற்கூரைகள் ஆகியவற்றை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வேனில் ஏற்றி சென்றனர்.