ஏர்வாடி மலைப்பகுதியில் மர விதைப்பந்துகள் வீசும் பணி தொடக்கம்!

 
seed balls

நெல்லை மாவட்டம் ஏர்வாடி மலைப்பகுதியில் மர விதை பந்துகள் வீசும் பணியினை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி காந்தி நகர் பகுதியில் உள்ள மலைப் பகுதியில், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம், மரவிதை பந்துகள் வீசும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்டத்தில் ‘நெல்லை நீர்வளம்”அமைப்பின் மூலம் தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும்,அதன் ஒரு பகுதியாக இன்று சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில், ஏர்வாடி மலை குண்டு பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர்களை மூலம் 11 ஆயிரம் விதைப்பந்துகள், 44 ஆயிரம் மரவிதைகளுடன் வீசப்படுவதாகவும் கூறினார். 

nellai

இதில், எளிதாக கிடைக்ககூடிய வேம்பு விதைகள் இன்று வீசப்படுவதாக கூறிய அவர்,  மழை காலம் இதுவே சரியான நேரம் என்பதால் மரக்கன்று விதைகள் வீசும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.  நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பள்ளி, கல்லூரி வளாகத்தில் உள்ள மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறிய ஆட்சியர் விஷ்ணு, ராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளில் மட்டும் 40 மீ.மீ மழை பெய்துள்ளதாக கூறினார். 

மேலும், அனுமன் நதியிலுள்ள 44 குளங்கள் நீர் நிரம்பியுள்ளதாகவும்,  இது நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்தார். மழை குறைந்து வருவதால் இனிவரும் காலங்களில் தான் வேளாண் துறையின் மூலம் மாவட்டத்தில் ஏதேனும் பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பதற்கான கணக்கீடும் பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறிய ஆட்சியர் விஷ்ணு, மழையினால் பாதிப்படைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் மழையினால் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

nellai

முன்னதாக நாங்குநேரியில் உள்ள பெரியகுளத்தில் மலைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு, கரைகளின் உறுதிதன்மை குறித்தும் ஆய்வு செய்த ஆட்சியர்,தொடர்ந்து ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வனத்துறை கள இயக்குநர் முருகன், நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி, ஏர்வாடி பேரூராட்சி செயல் அலுவலர் ஞானசுந்தரன் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.