சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்; தந்தை, மகள் பலி!

 
accident

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் கன்னையன் (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. இவர்களது 3 வயது மகள் சுகன்யா. நேற்று கன்னையன், மனைவி மற்றும் மகளுடன் சேலத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில்  பவானிக்கு திரும்பி கொண்டிருந்தார். சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் கன்னையனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட கன்னையன், அவரது மகள் சுகன்யா ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

salem
மேலும், பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அம்பிகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து கன்னையனின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோடு மாவட்டம் உடையகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பாலவிக்னேஷ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.