திருப்பத்தூர் அருகே ஓடையில் தவறி விழுந்து சிறுவன், சிறுமி பலி!

 
tirupattur

திருப்பத்தூர் அருகே விளையாடச் சென்ற 2 சிறுவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஏ.கே.மோட்டூர் கிராமம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சஞ்சனா(3). இதேபோல், கரிசலாம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மகன் கிஷாந்த்(3). சிறுவர்கள் இருவரும் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பாம்பாற்றில் ஓடை கலக்கும் இடத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஓடையில் தவறி விழுந்த 2 குழந்தைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

tirupattur gh

இதனை கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓடையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேர தேடலுக்கு பின்னர் குழந்தைகள் சஞ்சனா, கிஷாந்த் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனை அடுத்து, திருப்பத்தூர் கிராமிய போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடையில் விளையாடிய போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 குழந்தைகள் பலியான சம்பவம் ஏ.கே.மோட்டூர் கிராம மக்களிடையே சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.