உலக நீரிழிவுநோய் தினத்தையொட்டி, ஈரோட்டில் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி!

 
human chain

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, ஈரோட்டில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

ஈரோடு  மாவட்டத்தில் உலக நீரிழிவு (சர்க்கரை) நோய் தினத்தை முன்னிட்டு ஈரோடு டாக்டர் மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியானது ஈரோடு குமலன்குட்டை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவர் ஜிதேந்திரன் தலைமை தாங்கினார். இதில் பாரதி வித்யா பவன் கல்வி நிறுவனங்களின் தலைவர் இராமகிருஷ்ணன், அரிமா சங்க மண்டல தலைவர் தமிழ்செல்வன், ஈரோடு தெற்கு அரிமா சங்க தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

human chain

மேலும், நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு, பிறகு பேசிய ஈரோடு டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவர் ஜிதேந்திரன் கூறியதாவது, நீரழிவு நோய் 3 வகைப்படும் டைப் 1 டையாபெட்டீஸ் எனப்படும் முதலாவது வகை  நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஒன்றாகும். இதற்கு இன்சுலின் கொடுப்பதன் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். டைப் 2 டையாபெட்டீஸ் 2-வது வகை  உலகில் பொதுவாக மக்களுக்கு வரக்கூடிய நோய். இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். 

human chain

இல்லையென்றால் இன்சுலின் அல்லது மாத்திரை எடுத்து கொள்வதன் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மூன்றாவது வகை கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ஒன்றாகும். இது அவர்களுடைய பேறு காலம் முடிந்தவுடன் சரியாகி விடும். நீரிழிவு நோய் இன்று அதிகமாக வருவதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவு பழக்க முறைகளே காரணிகளாகும். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமும் சீரான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நாம் ஆரோக்கியமாக வாழலாம். நீரிழிவு நோய் வராமலும் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.