பெருந்துறை அருகே பரிதாபம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

பெருந்துறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மல்லிகா (60). இவர்களுக்கு அமுதா (30), பூவிழி (28) என 2 மகள்கள் உள்ளனர். இதில் பூவிழிக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சின்னசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த நிலையில், மூத்த மகள் அமுதாவுக்கு வடிவேல் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனன்யா (9) என்ற மகள் உள்ளார். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமுதா, கணவரை பிரிந்து மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.  

அமுதா பெருந்துறை அடுத்த சரலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவரது மகள் தனன்யா, அதே பள்ளியில் 5-ம்  வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மல்லிகாவின் 2-வது மகள் பூவிழி  திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மல்லிகா, அவரது மகள் அமுதா மற்றும் தனன்யா ஆகியோர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். நேற்று இரவு வழக்கம்போல் தூங்க சென்றனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டுக் கதவுகள்  திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மல்லிகா வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளனர். 

dead

ஆனால் பதில் ஏதும் வரவில்லை. பின்னர் கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மல்லிகா தனியாகவும், மற்றொரு அறையில் அமுதா மற்றும் தனன்யா இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.