திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... மயிலாடுதுறை அருகே சோகம்!

 
sirkazhi

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் இலக்கியா(29). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்துள்ள மலைக்கோவிலை சேர்ந்த பாண்டியராஜ் உடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், இலக்கியாவிடம் கணவர் வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் இலக்கியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

sirkali gh

தகவல் அறிந்த இலக்கியாவின் பெற்றோர், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் இலக்கியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 3 ஆண்டுகளில் இலக்கியா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.