மதுரை அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

மதுரை அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரம். இவர்களது மகள் சந்தியா (22). இவருக்கும், ஏ.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விஜய், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இது சந்தியா குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், அவர்கள் விஜயை கண்டித்துள்ளனர். எனினும் விஜய் அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சமுத்திரக்கு போன் செய்த விஜய், சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சமுத்திரம், உடனடியாக சந்தியாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, சந்தியா, தூக்கில் சடலமாக தொங்கினார்.
இதனை அடுத்து, மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சமுத்திரம் சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணமாகி சில ஆண்டுகளிலேயே சந்தியா உயிரிழந்ததால், இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.