மாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கிய விவகாரம்... அரசுப் பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்!

 
tirupur

திருப்பூரில் மாற்றுத் திறனாளியை குடும்பத்துடன் அரசுப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட விவகாரத்தில் பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். 80 சதவீத பார்வை குறைபாடுடைய இவருக்கு, அரசு சார்பில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சத்தியராஜ், தனது மனைவி மற்றும் மகன் சிபிராஜ்(17) ஆகியோருடன், வீரபாண்டியில் இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து நடத்துனரான முத்துக்குமார் டிக்கெட் எடுக்கக்கூறிய போது, மனைவிக்கு பெண்கள் பேருந்தில் கட்டணம் இல்லை என்பதால் தன்னுடன், தனது மகனுக்கு இலவச பாஸ் செல்லும் என கூறியுள்ளார்.

suspend

ஆனால் அதனை ஏற்க மறுத்த நடத்துனர், சத்தியராஜுடன் அவரது மனைவிக்கு மட்டுமே பாஸ் பொருந்துமெனவும், மகனுக்கு தனியே டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். இதற்கு சத்தியராஜ் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, நடத்துனர் முத்துக்குமார் சத்தியராஜை குடும்பத்துடன் பேருந்தில் இறக்கிவிட்டுள்ளார். மேலும், இதனை வீடியோ எடுத்த சத்தியராஜின் மகனையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாற்றுத்திறனாளி சத்தியராஜ், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

இதனிடையே, மாற்றுத்திறனாளி உடன் பேருந்து நடத்துனர் முத்துக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளியை குடும்பத்துடன் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட விவகாரத்தில் நடத்துனர் முத்துக்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டு உள்ளார்.