சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

 
rape

கோபிசெட்டிபாளையம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் அருகேயுள்ள செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (22). கூலி தொழிலாளி. இவர் வேலை செய்யும் இடத்தில், கோபியை சேர்ந்த 17 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார். அப்போது, சஞ்சய்க்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், சஞ்சய், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச்சென்று மொடச்சூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

gobi

இது குறித்து அந்த பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட சைல்ட் லைனிற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சைல்டு லைன் ஆலோசகர் தீபக்குமார் (31), கோபிச்செட்டிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து தகவல் தெரிந்ததும் சஞ்சய் தலைமறைவாகி விட்டார்.  இதை அடுத்து, கோபிச்செட்டிப்பாளையம் மகளிர் போலீசார் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். மேலும், சிறுமியை மீட்டு ஈரோடு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.