நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி மொடக்குறிச்சியில் இன்று கடை அடைப்பு போராட்டம்!

 
shop close

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி இன்று வணிகர் சங்கங்கள் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், மொடக்குறிச்சி  வட்டாட்சியர் இடம் தேர்வு செய்வதில் காலந்தாழ்த்துவதாகவும், மொடக்குறிச்சிக்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாகவும் புகார் எழுந்தது. இதற்கு மொடக்குறிச்சி பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

shop close

இது தொடர்பாக மொடக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் தமிழக அரசு ஆணைப்படி மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதும் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் படி, இன்று மொடக்குறிச்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், மொடக்குறிச்சி நான்கு ரோட்டில் பொதுமக்கள், வணிகர்கள் ஒன்று திரண்டு பேரணியாக மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொடக்குறிச்சியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.