பொன்னமராவதி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராசாத்தி. இவர்களது மகள் கோகிலா(17). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராசாத்தி வயலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, கோகிலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கோகிலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு ராசாத்தி கதறி அழுதார்.
இது குறித்து காரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி கோகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை முத்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.