செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை!

 
suicide

தேனி மாவட்டம் போடியில் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பையா. இவரது மனைவி மலர்கொடி. இவர்களது 16 வயது மகள் தாரணி. இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், தாரணி படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும் செல்போனில் நீண்ட நேரமாக கேம் விளையாடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.

bodi town

இதனால் வேதனையடைந்த தாரணி, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். அவர் தூங்க செல்வதாக நினைத்து பெற்றோர் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை பெற்றோர் சென்று பார்த்தபோது தாரணி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த போடி டவுன் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தாரணியின் தாய் மலர்கொடி அளித்த புகாரின் பேரில், போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.