திருப்பத்தூர் அருகே புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

 
suicide

திருப்பத்தூர் அருகே திருமணமான சில நாட்களில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் பானுபிரியா(25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவருடன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும், கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி துருவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பானுப்பிரியா கணவருடன் காக்கனாம்பாளையத்தில் வசித்து வந்தார்.

tirupattur gh

இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பானுபிரியா கடந்த சனிக்கிழமை அன்று அதே பகுதியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் குரிசிலாப்பட்டு போலீசார் மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி பானுபிரியாவின் உடலை மீட்டனர். தொடர்ந்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பானுபிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான சில நாட்களில் பானுபிரியா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.