திருவாரூரில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மே 1-ல் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் தகவல்!

 
thiruvarur collector

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தனிநபர் சுகாதாரம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு தடை செய்தல், முன்மாதிரி கிராமமாக உருவாக்குதல், அனைவரும் கழிப்பறையை பயன்படுத்துதல், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விரிவான கிராம சுகாதார திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலன், நமக்கு நாமே திட்டம், அனைத்து வீடுகளுக்கும்  பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது.

thiruvarur

கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கிற கிராம சபை கூட்டத்தில்  அனைத்து தரப்பு பொதுமக்களும்  தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பை முழுமையாக வழங்கலாம் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.