கோவை குற்றாலத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பதில் மோசடி: வனவர் சஸ்பெண்ட், ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்!

 
cbe

கோவை குற்றாலம் அருவியில் நுழைவு கட்டணத்தில் மோசடியில் ஈடுபட்ட வனவர் ராஜேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கோவை மாவட்டம் சாடிவயல் போளுவாம்பட்டி வனப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர். போளுவாம்பட்டி வனச்சரம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் மற்றும் வாகனங்களுக்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

kovai

இதனிடையே நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் உள்ள 2 இயந்திரங்களில் நுழைவுச்சீட்டை அச்சிட்டு பணத்தை பெறுவதும், ஆனால் ஒரு இயந்திரத்தில் பதிவாகும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை மட்டுமே அரசுக்கு செல்லும் வகையில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் சமீபத்தில் தெரியவந்தது. மற்றொரு இயந்திரத்தில் நுழைவு கட்டணம் போன்றே போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி அதற்காக வசூலிக்கப்படும் தொகையை அதிகாரிகளே எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 6 மாத காலத்தில் பல லட்சம் ரூபாய முறைகேடு நடைபெற்றதும், இந்த முன்பிருந்த வனச்சரக அதிகாரிக்கு தொடர்புள்ளதும் உறுதியானது.

suspend

இந்த மோசடி தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனவராக பணிபுரிந்து வரும் ராஜேஷ்குமார், இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் முன்னாள் போளுவாம்பட்டி சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன், கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து போலி நுழைவுச்சீட்டுகளை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, போலி நுழைவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட  வனவர் ராஜேஷ்குமாரை, பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தவிட்டார். மேலும், அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறை அதிகாரிகளே போலி நுழைவுச்சீட்டு அச்சிட்டு வழங்கி மோசடியில் ஈடுபட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.