ஆரணியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

 
arani

ஆரணியில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. நேற்று இரவு கோவிலில் பூஜை முடிந்து பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை மீண்டும் கோவிலை திறந்து உள்ளே சென்றபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் கோவில் பூசாரி, இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.

robbery

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஆரணி டவுன் காவல் நிலைய போலீசார் சsம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோவிலில் பொருத்தி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில்  3 மர்மநபர்கள் வருவதும், அவர்கள் கோவில் சுவர் மீது ஏறிகுதித்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும், போலீசாரின் விசாரணையில் கோவில் உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரிய வந்தது. தொடர்ந்து, ஆரணி டவுன் போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.