குடியாத்தம் அருகே நிலத்தகராறில் முதியவர் அடித்துக்கொலை!

 
murder

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நிலத் தகராறில் சித்தப்பாவை அடித்துக்கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பிரபல்லி அருகே கொல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் ரவி (60). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் கோவிந்தசாமியின் குடும்பத்திற்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ரவி, தனது சகோதரி லைலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கோவிந்தசாமியின் மகனான ராஜேந்திரன் (28) என்பவர் அங்கு வந்து, ரவியிடம் நிலப் பிரச்சினை குறித்து பேசியுள்ளார். அப்போது, ரவிக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது சித்தப்பவான ரவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

vellore gh

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து ரவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று காலை ரவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, குடியாத்தம் போலீசார், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, விசாரித்து வருகின்றனர்.