செல்போன் பேசியதை கண்டித்ததால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
suicide

ஈரோட்டில் செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (40). தறிப்பட்டறை தொழிலாளி. உடல்நலக்குறைவால் இவரது கணவர் சிவா 2 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் பாக்கியலட்சுமி(13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அம்பிகா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பாக்கியலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அம்பிகா மதியம் சாப்பிடுவதற்காக 2.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை. 

erode gh

இதனால் சந்தேகமடைந்த அம்பிகா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் பாக்கியலட்சுமி தொங்கிக் கொண்டிருந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த அம்பிகா, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாக்கியலட்சுமி  இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அம்பிகா அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் பாக்கியலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. எனினும் இதுதான் காரணமா?  அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.