நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை... பவானிசாகர் அணைக்கு 4,342 கனஅடி நீர்வரத்து!

 
bhavani sagar dam

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 342 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் மூலம் பல்வேறு நீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.  கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

இந்த ஆண்டில் 2 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு 103 அடியை எட்டியது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணை தொடர்ந்து 103 அடியிலேயே இருந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 103.62 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 342 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 300 கனஅடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

bhavanisagar dam

இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நேற்று 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பவானி, சித்தோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆறு, கொடுமுடி போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை நீர்நிலை அருகே மேய்க்க விடக்கூடாது என்றும், மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காவிரிக்கரை பகுதியை தொடர்ந்து வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று சத்தியமங்கலம், தாளவாடி, கொடிவேரி, குண்டேரிபள்ளம் போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.