தந்தை திட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

தென்காசி அருகே சரியாக படிக்கவில்லை என தந்தை கண்டித்ததால் மனமுடைந்த 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். தொழிலாளி. இவரது மகள் செல்வி (16).  இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், செல்வி சரியாக படிப்பில் கவனம் செலுத்த வில்லை கூறப்படுகிறது.  இதனால் அவரை நன்றாக படிக்கும்படி கூறி தந்தை குமார் திட்டியுள்ளார்.

tenkasi ttn

இதனால் மனமுடைந்த செல்வி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து இதுகுறித்து  கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், காவல் ஆய்வாளர ரெகுராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரியாக படிக்கவில்லை என தந்தை கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.