பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்… 2 நண்பர்களுடன் விஷம் குடித்த இளைஞர் பலி!

 

பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்… 2 நண்பர்களுடன் விஷம் குடித்த இளைஞர் பலி!

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உடன் விஷம் குடித்த 2 நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கப்பலுடையான் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயி. இவரது மகன் ஆனந்த். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்குமார் (26), ஆசைத்தம்பி (28). இணை பிரியாத நண்பர்களான மூவரும், நாள்தோறும் மது அருந்தி வந்துள்ளனர். இதனால் அவர்களை பெற்றோர் கண்டித்து உள்ளனர். எனினும் மூவரும் வழக்கம் போல் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்… 2 நண்பர்களுடன் விஷம் குடித்த இளைஞர் பலி!

இதனிடையே, நேற்று ஆனந்தை, அவரது தந்தை கார்த்திகேயன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த ஆனந்த் நேற்று இரவு மது அருந்தும்போது, தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அசோக்குமாரும், ஆசைத்தம்பியும், அப்படி செய்தால் தாங்களும் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மூவரும் மதுவில் விஷத்தை கலந்து குடித்தனர்.

மயங்கி கிடந்த மூவரையும் உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆனந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அசோக்குமார், ஆசைத்தம்பி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.