முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் சேரன் கோரிக்கை!
சென்னையில் விநியோகம் செய்யப்படும் கேன் வாட்டர்களின் தரத்தை மக்கள் அறிந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழும் மக்களுக்கு குடி தண்ணீர் மற்றும் சமையலுக்கான தண்ணீர் பெரும்பாலும் கேன் வாட்டர் சப்ளை மூலமாகத்தான் விலைக்கு கிடைக்கிறது.. தினசரி பயன்பாட்டில் முக்கியமானதான தண்ணீரின் தரம் சோதிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள எந்த வழியும் பயன்பாட்டாளருக்கு இல்லை.
சுத்தமான தண்ணீராக இல்லையெனில் அதுவே நோய் பரவுவதற்கான முதல் காராணமாக மாறும். அரசு இதற்கான ஒரு முக்கிய முடிவு எடுத்தல் முன்னேற்பாடாக இருக்கும். பரிசோதனையும் அரசு முத்திரையும் இருக்கும்படியான அனுமதி வாங்குதல் வழங்குதல் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் அலை பரவத் தொடங்கிய இக்கட்டான காலக்கட்டத்தில் அரசு பதவியேற்றாலும், திறம்பட ஆட்சி புரிந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சென்னை மக்களின் பெரும் பிரச்னையை முன்வைத்த இயக்குனர் சேரனின் இந்த கோரிக்கையையும் அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.