பசுபதி பாண்டியன் வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை – மூவர் கைது!

 

பசுபதி பாண்டியன் வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை – மூவர் கைது!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2010ஆம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 18 பேர் மீது, திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நந்தவனப்பட்டியை சேர்ந்த நிர்மலா தேவி, நேற்று முன்தினம் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் நின்றிருந்தார்.

பசுபதி பாண்டியன் வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை – மூவர் கைது!

அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரது தலையை துண்டித்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலையாளிகள் திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலை சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக மாவட்ட எஸ்.பி. சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், எஸ்.பி தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் நிர்மலா தேவி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் கரட்டழகன்பட்டியை சேர்ந்த நடராஜன்(45), செம்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த அய்யனார்(21), செம்பட்டி சீவல்சரகை சேர்ந்த பூபாலன்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்கள் மூவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர்.