ஊரடங்கால் மதுரை செல்ல முடியாமல் அவதியுற்ற திண்டுக்கல் மக்கள்! – கடைசி நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்த அதிகாரிகள்
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் திண்டுக்கல்லிலிருந்து மதுரை மாவட்டத்துக்குச் செல்வதற்காக வந்த பயணிகள் அவதியுற்றனர்.
மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் நேற்று மாலை முதல் மதுரை மாவட்டம் வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. திண்டுக்கல் போக்குவரத்து மண்டலத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் அடங்கியுள்ளன. திண்டுக்கல்லிலிருந்து தேனி, மதுரை, ராமநாதபுரம், தென் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பஸ் திண்டுக்கல் மாவட்ட எல்லை வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல், பழனி பகுதியில் கொடை ரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் வாடிப்பட்டி வரை இயக்கப்பட்டன. நத்தம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் கடவூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. நிலக்கோட்டை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் செக்கனூரணி வரை மட்டும் இயக்கப்படுகிறது.
மதுரைக்கு செல்லும் பஸ்கள் இயங்காது என்று அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இது தெரியாமல் ஏராளமானவர்கள் மதுரை செல்ல திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே திண்டுக்கல் மாவட்ட எல்லை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பை திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் அறிவித்தது.