இருசக்கர வாகனத்தில் கர்நாடக மது பாட்டில்கள் கடத்தல் – தருமபுரியில் 12 பேர் கைது!

 

இருசக்கர வாகனத்தில் கர்நாடக மது பாட்டில்கள் கடத்தல் – தருமபுரியில் 12 பேர் கைது!

தருமபுரி

தருமபுரி மாவட்டம் வழியாக கர்நாடக மது பாட்டில்களை கடத்தமுயன்ற 12 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 825 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், கர்நாடகாவில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக மதுபானம் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இதனால், சோதனைச் சாவடிகளில் தருமபுரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி, நேற்று காரிமங்லம் அருகே உள்ள கும்பாரஹள்ளி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக 5 இருசக்கர வாகனங்களில் வந்த 10 நபர்களை மறித்து, சோதனையிட்டனர். அப்போது, வாகனங்களில் கர்நாடக மாநில மது பாட்டில்களை மறைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் கர்நாடக மது பாட்டில்கள் கடத்தல் – தருமபுரியில் 12 பேர் கைது!

இதனையடுத்து, மதுபாட்டில்களை கடத்திவந்த தர்மபுரியை சேர்ந்த அஜித்குமார், தாமோதரன், முரளி, சேலத்தை சேர்ந்த சுப்பிரமணி, தீபக், சிலம்பரசன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 534 மது பாட்டில்கள், 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பாலக்கோடு அருகே மாரண்டஹள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்த சக்கிலிநத்தம் பகுதியை சேர்ந்த வேடியப்பன், மாதேஷை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 291 மதுபாட்டில்களும், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.