நில விவகாரத்தில்தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு!
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே
நில விவகாரத்தில் தீக்குளித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அங்குள்ள கணபதி கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி (65) .
இவர் தனது நிலத்தை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியிலும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த புறம்போக்கு நிலத்தின் வழியாக அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கு பாதை அமைத்து தரவேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அப்பகுதி மக்களின் தேவைக்காக வழிப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். அதற்கு சின்னசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நிலத்தை அளவீடு செய்யும் பணியின்போது, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
இதையடுத்து அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.