தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பா?- டிஜிபி திரிபாதி விளக்கம்
தூத்துக்குடியில் நேற்று ரவுடி வெடிகுண்டு வீசியதில் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக டிஜிபி திரிபாதி மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்றார். தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி அலுவலகத்திற்கு சென்ற தமிழக டிஜிபி திரிபாதி, தென்மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபினபு, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உருவ படத்திற்கு டிஜிபி திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி திரிபாத, “ஒரு சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது. காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இல்லை. ஆனால் எதிர்பாராத விதமாக இதுபோன்ற இழப்புகள் நடைபெறுகிறது. காவலர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும்.” எனக்கூறினார்.