தைப்பூசம் திருவிழா முடிந்தும், பழனிக்கு படையெடுக்கும் ஈரோடு பக்தர்கள்…
ஈரோடு
பழனியில் தைப்பூச திருவிழா நிறைவடைந்தபோதும், ஈரோடு வழியாக பாத யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இதன்படி, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நடந்த தைப்பூச திருவிழாவிற்காக சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பல்லாயிக்கணக்கானோர் யாத்திரை சென்று சுவாமியை தரிசித்து வந்தனர்.
இந்த நிலையில், தைப்பூச திருவிழா நிறைவடைந்த போதும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஈரோடு மாவட்டம் வழியாகவும் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை சென்று கொண்டுள்ளனர். குறிப்பாக சேலம் மாட்டம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் காவடி ஏந்தியவாறு நாள்தோறும் ஈரோடு மாவட்டத்தை கடந்துசென்று வருகின்றனர்.
பாத யாத்திரை செல்பவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் உணவு மற்றும் குடிநீர் வழங்கி உதவி வருகின்றனர். ஆனால் இரவில் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு காவல்துறை சார்பில் வழங்கப்படும், ஒளிரும் பட்டைகள் தரப்படாததால் யாத்ரிகர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.