முதல்வர் ஆய்வுக் கூட்டங்களில் தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு மறுப்பு… ஸ்டாலின் கண்டனம்

 

முதல்வர் ஆய்வுக் கூட்டங்களில் தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு மறுப்பு… ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் மாவட்டம் தோறும் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தி.முக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆய்வுக் கூட்டங்களில் தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு மறுப்பு… ஸ்டாலின் கண்டனம்


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்துவரும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமாரை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, “நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்” என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல்; பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
மக்களாட்சியின் அடிப்படை மற்றும் நிர்வாகத்தின் ஆரம்ப இலக்கணத்தை, முதலமைச்சராகி மூன்றாண்டுகளைக் கடந்த பின்னரும், புரிந்து கொள்ளும் குறைந்தபட்சத் திறன்கூட இல்லாமல் போய்விட்டதே என்பது மிகுந்த வேதனைக்குரியதும் பரிதாபத்திற்குரியதும் ஆகும். இதே போல் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் தி.மு.க. எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டத்திலோ அல்லது அக்கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பங்கேற்க அனுமதி கேட்கவில்லை; கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கோருவது, அரசின் செலவில் – அரசு அதிகாரிகளுடன் – அதுவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் மற்றும் கொரோனா மரணங்களைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத்தான் அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

முதல்வர் ஆய்வுக் கூட்டங்களில் தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு மறுப்பு… ஸ்டாலின் கண்டனம்


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இது அடிப்படை உரிமை; அதை ஏதோ இவர்களுடைய சொந்த வீட்டில் சொந்தச் செலவில் தனிப்பட்ட முறையில் நடத்தும் நிகழ்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டு மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தைப் புறக்கணிக்கும் கீழ்மை என்பதை முதலமைச்சர் பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் பாதிப்பை, மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், பிறகு யாரிடம் முதலமைச்சர் கேட்க மாவட்டங்களுக்குப் போகிறார்?
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கியம். அவர்கள் ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை, முதலமைச்சர் பழனிசாமி உணர வேண்டும். மக்களாலோ, பெரும்பான்மை உறுப்பினர்களாலோ தேர்ந்தெடுக்கப்படாமல், ‘லாட்டரி’ அடித்ததைப் போலக் கூவத்தூரில் முதல்வர் ஆக்கப்பட்டதால், மக்களின் அருமை அவருக்கு விளங்கவில்லை போலும்!
தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அரசு விழாக்களுக்கு அழைப்பதை அமைச்சர்களும், முதலமைச்சருமே கூட தவிர்ப்பது, ஆரோக்கியமான ஆட்சி முறைக்கு அழகல்ல; அருவருப்பானதாகும். அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகளை எங்கே மேடையில் பேசி விடப் போகிறார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே இப்படி கழக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அரசு விழாக்களில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கிறது அ.தி.மு.க. அரசு.
ஏற்கனவே கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்டின் தன்னை அரசு விழாவிற்கு அழைக்கவில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொடுத்த போது, மாண்புமிகு தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அவர்கள், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அரசு விழாக்களுக்குக் கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவர்களின் பெயரை அரசு விழாக்களின் அழைப்பிதழில் பிரசுரிக்க வேண்டும்” என்று அ.தி.மு.க. அரசுக்கு அறிவுரை செய்தார். ஆனால் தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவரின் அறிவுரையையே அ.தி.மு.க. அமைச்சர்களும் கேட்பதில்லை; முதலமைச்சரும் கண்டு கொள்வதில்லை என்பது அராஜகத்தின்பாற்பட்டதாகும். அந்த அறிவுரை வெற்று அறிவுரை ஆகி, காற்றோடு கலந்து விட்டது!

முதல்வர் ஆய்வுக் கூட்டங்களில் தி.மு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு மறுப்பு… ஸ்டாலின் கண்டனம்


ஆகவே அரசு விழாக்களுக்கும் – மாவட்ட அளவில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை அழைக்காமல் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதலமைச்சரும் – அ.தி.மு.க. அமைச்சர்களும் உடனடியாகக் கைவிட வேண்டும்; கைவிடாவிட்டால் மக்கள் மேலும் கடுமையாகத் தண்டிப்பார்கள். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், ‘கொரோனா காலத்தில்’ நான் அளித்த பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கேட்காத முதலமைச்சர் – இந்த விஷயத்தில், குறைந்தபட்சம் தமிழக சட்டப் பேரவைத் தலைவரின் அறிவுரைக்காவது செவிமடுக்க வேண்டும் என்றும், தி.மு.க. எம்.பி., எம்.எல். ஏ.,க்களை அரசு விழாக்களுக்கும், ஆய்வுக்கூட்டங்களுக்கும் அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி – மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொள்ளகிறேன்” என்று கூறியுள்ளார்.