டெங்கு காய்ச்சல் – அறிகுறிகள் அறிவோம்!
கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் தொற்றால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஏடிஸ் எஜிப்டி என்ற கொசு மூலமாக டெங்கு வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. டெங்கு பாதிப்பு உள்ள ஒருவரைக் கடிக்கும் ஏடிஸ் எஜிப்டி கொசுவில் டெங்கு வைரஸ் ஒட்டிக்கொள்கிறது. மற்றொருவரைக் கடிக்கும்போது இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது.
டெங்கு வைரஸ் தொற்று உள்ள கொசு கடித்ததில் இருந்து நான்கு முதல் 10 நாளில் டெங்கு அறிகுறிகள் வெளிப்படும். இது அவரவர் உடல் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து மாறுபடும்.
டெங்கு காய்ச்சல் என்றால் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு காய்ச்சல் இருக்கும்.
இதனுடன்,
தலைவலி
எலும்பு, மூட்டு, தசை வலி
குமட்டல்
வாந்தி
கண்ணின் பின்புறம் அதீத வலி
சருமத்தில் சிவப்பு புள்ளிகள்
இவை டெங்கு காய்ச்சலின் வெளியே தெரியக் கூடிய, உணரக் கூடிய அறிகுறிகள் ஆகும்.
டெங்கு காய்ச்சல் போல இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் அது உயிருக்கு ஆபத்தாகக் கூட முடியலாம்.
டெங்கு வைரஸ் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இதனால் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படலாம். அது பக்கவாதம், உள் உறுப்புகள் செயலிழப்பு, கடைசியில் மரணத்தை ஏற்படுத்தலாம்!
டெங்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால்,
அதீத வயிற்று வலி
தொடர் வாந்தி
ஈறு மற்றும் மூக்கில் ரத்தம் வடிதல்
சிறுநீர், மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுதல்
சருமத்துக்கு அடியில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் சிராய்ப்பு ஏற்பட்டது போன்ற தோற்றம்
சுவாசப் பிரச்னை
சோர்வு
அமைதியின்மை போன்றவை ஏற்படும்.